பொலிஸ் உத்தியோகத்தரை ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் மிரட்டியதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வெலிப்பென்ன பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் சார்ஜன்ட் ஒருவரை கடுமையாகத் திட்டியதாகவும், இடமாற்றம் செய்யப்படும் என மிரட்டியதாகவும் களுத்துறை மாவட்ட தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் மற்றும் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ அறிவித்துள்ளார்.
இந்த சம்பவம் பற்றி வெலிபென்ன பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரியிடம் குறித்த சார்ஜன்ட் முறையிட்டுள்ளார்.
சட்டவிரோத மது விற்பனை செய்யும் ஒருவரை கைது செய்ததைத் தொடர்ந்து, அந்த பகுதியைச் சேர்ந்த தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ ரணசிங்க, சாஜன்ட் அஜித்தை தொலைபேசியில் தொடர்புகொண்டு கடுமையான வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது.
மேலும், வவுனியாவுக்கு இடமாற்றம் செய்வேன் என அவர் மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.
பின்னர், அவர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியை அழைத்து, அஜித் எனும் காவலரின் வீட்டு முகவரி உள்ளிட்ட விவரங்களை கேட்டுக்கொண்டதாகவும், அவர் தவறான வழக்குகள் பதிந்துள்ளதாக குற்றம்சாட்டியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த விவகாரத்தில் நடந்த உரையாடல்கள் மற்றும் முறைப்பாடுகள், பொலிஸ் நிலைய அதிகாரியின் பொலிஸ் தகவல் புத்தகத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, இது தொடர்பான உண்மை விரைவில் வெளிவரும் எனவும் விசாரணை ஆரம்பமாகியுள்ளது, எனவும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், வெலிப்பென்ன பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரியிடமிருந்து அறிக்கை கோரப்பட்டுள்ளதுடன், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரின் தலைமையில் விசாரணை ஆரம்பிக்க்பபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவம் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்படுவதாகவும், பொதுவாக தமது கட்சியின் உறுப்பினர்கள் இவ்வாறான செயல்களில் ஈடுபடுவதில்லை எனவும் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.